.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Wednesday, September 30, 2015

ஏற்றம் வரும் எதிரிலே !

பதிவர் திருவிழாவிற்காக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துப் போட்டிகளின் கருவையும் (கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கான கருத்துக்கள்) ஒரு கவிதையில் உருவாக்கியுள்ளேன்...படியுங்கள் !
========================================================================

செந்தமிழ் மொழியாம் தமிழைக்
    கணிணினியின் தாய்மொழி ஆக்கி..
எந்தவோர் பணியும் மிகவும்
   எளியதாய் செய்திட வைப்பாய் !

பெண்ணினை தெய்வம் என்றே
   போற்றிய‌ நாட்டுக் குள்ளே...
எண்ணவே முடியாக் கொடுமை
   நடப்பதை முடித்தே வைப்பாய் !

மரங்களை மாய்த்தும் சாய்த்தும்
   கடலிலேக் கழிவை சேர்த்தும்...
தரம்கெட்ட செயல்கள் செய்யும்
   மனமற்ற மனிதர் சாய்ப்பாய் !

முன்னவர் காட்டிய வழியாம்..
  பண்பாடு என்னும் பாதை...
சொன்னஅப் பாதையை மாறி...
   செல்கின்ற எண்ணம் விடுப்பாய் !

மாற்றத்தை செய்திட இயலும்...
   மனதிலே நம்பிக்கை வைத்தால் !
ஏற்றத்தைக் கண்டிடும் நாட்கள்...
   எதிர்வரும் முயற்சியின் பயனால் !

உறுதிமொழி:

1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 5 மரபுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்

2.  இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்
  

Tuesday, September 29, 2015

ஆணி வேர் !

பதிவர் திருவிழாவையொட்டி நடக்கும் 'பண்பாடு' பற்றிய புதுக்கவிதை போட்டிக்கு நான் பதிவு செய்த கவிதை:
இங்கே
அதே கருத்துக்களை மரபுக் கவிதை வடிவில் பதிவு செய்துள்ளேன்...படியுங்கள்...கருத்துக்களை பகிருங்கள்...
--------------------------

புதுயுக வாழ்க்கை தன்னில்
   பழையதாம் பண்பா டெல்லாம்
எதுக்குத்தான் உதவும் என்று
    எகத்தாளக் கேள்வி உண்டு !
மரமது வளர்ந்தபின் கூட...
    மண்ணிலே ஆணிவேர் தேவை!
மனமதில் வைத்திடு இதையே !
    பண்பாடே வாழ்வின் வேராம் !

அன்புடன் நேயம் என்னும்
    அருமையாய் நெறிகள் சொல்லும்
பண்புடன் மனிதம் வாழ...
    பண்பாடு வழிகள் சொல்லும் !
முன்புநாள் சோற்றில் தானே
    முத்தான சத்தும் உண்டு !
அன்றுநம் முன்னோர் செய்த‌
   அமுதமே பண்பா டாகும் !

பழக்கமே ஆளை ஆக்கும் !
    பழக்கமே ஆளை வார்க்கும்!
வழக்கமாய் செய்யும் முறையே
     பண்பாடு சொல்லிக் காட்டும் !
புழுக்கத்தில் தென்றல் போல...
     புத்துணர் எண்ணம் கூட்டும் !
புழக்கத்தில் வைப்பாய் அதையே!
     பெருமைகள் பெரிதாய்ச் சேரும் !

Monday, September 28, 2015

தொடர்ந்து எழுது தோழா !



காவியம் படைச்சோமுன்னு
    கவிதையும் எழுதிவெச்சா...
ஓவியம் வரைஞ்சோமுன்னு
    புதுமையாத் தீட்டிவெச்சா..
பாவிப்ப யலுகயாரும்
    பாத்துபா ராட்டுதன்னை
தூவிட்டுப் போகலைன்னு
   துக்கமா? தேவையில்லை !

சப்பையாய் சரக்கில்லாமல்
   சரமாரி எழுதற'அவனும்'
குப்பையாய் சந்தம்வெச்சு
   கிடைச்சத எழுதறபோதும்
"அப்பப்பா ஆஹா"என்று !
   அம்பது அலம்பல்வருது!
எப்பவும் அதைநினைக்காதே !
    உண்மையில் அதுநிளைக்காதே !

உன்னிடம் ஆற்றல்உண்டு!  
   உறுதியாய் அதையேநம்பு !
முன்னிடம் அதுவேஉன்னை
   மெனக்கட்டுச் சேர்க்கும்பாரு !
"என்னிடம் திறமைஇருக்கு"...
   என்றுநீ நம்பியேஎழுது!
கண்டிப்பாய் ஒருநாள்வருமே
   கூட்டம்உன் பின்னால்தானே !

உறுதிமொழி:

1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 5 மரபுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்

2.  இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்

Sunday, September 27, 2015

பண்பாடு - வேறல்ல...ஆணி வேர் !

'பழையதோர் பண்பாட்டாலே
பயனென்ன?' என்றே கேட்பார்...
பழஞ்சோற்றில் தானே நல்ல
பலந்தரும் ஆற்றல் அதிகம் !

உயரமாய் மரம் வளர்ந்தாலும்
அடியிலே ஆணிவேர் வேண்டும் !
உச்சியைத் தொடும் வாழ்வெனினும்
பண்பாடு அடித்தள மாகும் !

மனிதனின் தோலைப் போர்த்தி
மிருகமாய் உலவிடு வோர்க்கு
மனிதத்தின் மகத்துவம் சொல்லும்
முன்னோர் செய்தபண் பாடு !

இதற்கு இம்முறை நன்றே
எளியதாய் வகுத்தார் அன்றே !
நல்வழி காட்டிடும் போது
நள்ளிருள் பாதை எதற்காம்?

மாறிடும் காலங்கள் மாறும் !
நேரிய வழிகளைக் கூறும்...
சீரிய நம்பண் பாடென்றும்...
மறந்திடல் சரியா சொல்வாய் !


உறுதிமொழி:

1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 4 புதுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்

2.  இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்

Saturday, September 26, 2015

கன்னித் தமிழ் வளர்ப்போம் கணிணியிலே !

 பதிவர் திருவிழா - 2015 தொடர்பாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள எனது கட்டுரை !



நுழைநயில்

எத்தனை மொழி தெரிந்திருந்தாலும், எவருக்கும், தனது தாய் மொழியில் பேசும்போதுதான் ஒரு தனி சுகம் இருக்கும். எழுதும்போதும் அப்படித்தான். இந்நிலையில் அந்தத் தாய்மொழியானது, செம்மொழியாம், தமிழ் மொழியாகவும் இருந்தால்? ஆகா...சுந்தரத் தமிழ் மொழியைப் பேசிக் கொண்டே / எழுதிக் கொண்டே இருக்கத் தோன்றாதா? இன்றைய காலகட்டத்தில், நமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகி விட்ட கணிணியில் கூட, அவரவர் தனது சொந்த மொழியில் எழுதவும் / படிக்கவும் ஆர்வம் கொள்வது இயற்கைதானே ! இந்த ஆர்வத்தின் விளைவில் தான், கணிணியில், தமிழ் பிறந்தது !

"கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்தக் குடியினர்"

என்றாலும், தமிழ் மொழி கருத்து பறிமாற்றங்களுடன், கணிணியில் தமிழின் தோற்றம், மிகவும் தாமதமானதுதான். இருப்பினும், இன்றைய நிலையில், தமிழில் வரும் தளங்கள், பதிவுகளைப் பார்க்கும் போது, நல்லதொரு வளர்ச்சியினைக் காணமுடிகிறது.

கணிணியில் தமிழ் -  ஆரம்ப கால சவால்கள்

ஆங்கில கட்டளைகளை உள்ளேற்று, உடனே புரிந்து கொண்டு, செயாலாக்கும் திறனுடன், கணிணி உருவானாலும், அதனை சாதாரண மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டுமெனில், "அவரவர் மொழியில் பறிமாற்றங்களை செய்யவேண்டியது அவசியம்" என்பதை உணர்ந்த வல்லுநர்கள், அதற்கான் முயற்சியில் இறங்கினர். தமிழ் மொழியைப் பொறுத்த வரை, தமிழில் துவக்கப்பட்ட பல்வேறு "மின்னிதழ்கள்", கணிணியில் தமிழுக்கான துவக்கத்தைத் தந்தன. ஒவ்வொரு நிறுவனமும், தனக்கென்று ஒரு "எழுத்துரு" வைத்துக் கொண்டு, அதனை தரவிறக்கம் செய்து, வாசகர்கள் தமிழில் படிக்கலாம் எனும் வசதியில் செயல்பட்டனர். தகுந்த "எழுத்துரு" கணிணியில் இல்லாத நேரத்தில், எழுத்துக்கள் சிதற விட்ட பூச்சிகள் போல தோன்றும். இந்த அணுகுமுறையில் முக்கிய பிரச்சனையாக இருந்தது "தரப்படுத்துதல்" இல்லாதது தான் !

தமிழ் மொழியைக் கணிணியில் கொண்டு வர, பல தமிழ் மற்றும் கணிணியியல் வல்லுநர்கள் முயற்சியினால், வெவ்வேறு விதமான தீர்வுகள் தரப்பட்டாலும், அம்முயற்சிகள் சமூகத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எண்பதுகளின் முடிவிலும், தொண்ணூறுகளின் முதல் பாதி வரையிலும் இந்த நிலை நீடித்தது.


சவாலுக்கான தீர்வு

கணிணியில் தமிழ் பயன்பாட்டில் இருந்த சிக்கல்களைத் தீர்க்கும் முதல் முயற்சியாக, "முதல் தமிழ் இணைய மாநாடு" என்னும் நிகழ்ச்சி, 1997-ல் சிங்கப்பூரில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளை கையெடுத்து 1999-ல் சென்னையில் நடந்த "இரண்டாவது தமிழ் இணைய மாநாட்டில்", சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கத்தில் ஒரே மாதிரியான முறைப்பாடு இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. "தமிழ்நெட்-99" விசைப்பலைகையும், தமிழ் சொற்களுக்கான பொதுக் குறியீடுகளைப் (TAB, TAM) பயன்படுத்துவதிலும் ஒருமித்தக் கருத்து ஏற்பட்டது. இத்தகைய முடிவுகள் மற்றும் முன்னேற்றங்களுக்குப் பிறகும், இதன் செயலாக்கத்தில் சில சிக்கல்கள் இருந்தது என்றாலும், கன்னித் தமிழை, கணிணியில் ஏற்றும் முயற்சியில், இந்நிகழ்வுகளை ஒரு மைல்கல்லாகச் சொல்லலாம்.

சென்னையில் நடந்த இந்த மாநாட்டின் பயனாக,  தமிழகத்திற்கு, "தமிழ் இணையக் பல்கலைக்கழகம்"  கிடைத்தது. பின்னர் இது "தமிழ் இணையக் கல்விக்கழகம்" என்ற பெயர் பெற்றது.  மேலும்,  "தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி" என்ற ஒன்றும் நிறுவப்பட்டு, தமிழில் மென்பொருள் தயாரிப்போருக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இதற்கும் மேலாக, கணிணியில் தமிழ் மொழியை வளர்க்க வேண்டியதன் அவசியம் பரவலாக்கப்ப்ட்டது.

கணிணியில் தமிழ் வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான தொடர்ந்த ஆதரவு பெற வேண்டி, சிங்கப்பூர் அரசாங்கத்தின் தாராள நிதியுதவியுடன் "உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் " (உத்தமம்)  நிறுவப்பட்டது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடனும், இணையத்தின் அசுர வளர்ச்சியினாலும், கணிணியில் தமிழின் பயன்பாடு அதிகமானது.

வளர்ச்சிப் படிகள்

தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது/பெறுவது, அரட்டை அடிப்பது மிகவும் எளிதானது. கண் பார்வையில்லாதவர்களுக்கு உதவும் வகையில் தமிழில் பேசுவதை எழுத்தாக்கி, கட்டளையாக்கி கணிணிக்கு உள்ளீடு செய்யும் மென்பொருள் வெளிவந்தது. தமிழ் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் முதலியன மின் வடிவம் கொள்ளத் தொடங்கின. "உத்தமம்"  மூலமாக தமிழுக்கு "யூனிகோட்" கூட்டமைப்பு இடம் ஒதுக்கியது. கணிணியில் தமிழ் வளர்ச்சியின் வரலாற்றில், இது மற்றுமொரு மைல்கல்லாகவும், திருப்பு முனையாகவும் அமைந்தது என்பது மறுக்க முடியாது. குறிப்பாக, கணினியின் மூலம், இணையத்தில் பறிமாற்றம் செய்யப்படும் தமிழ் தகவல்கள், இந்த "யூனிகோட்" குறியீடு தரும் வசதியினால்தான் சாத்தியமாகிறது. இந்த கட்டுரை கூட 'யூனிகோட்' மாற்றியின் மூலமாக பதிவு செய்யப்பட்டது தான் !

தொடர்ந்த / தொடரும் முயற்சிகள்

சீனா, ஜப்பான் போன்ற நாடுகள், தங்கள் மொழியிலேயே கணிணிக்கான நிரலாக்கம் செய்கின்றன. இது போலவே தமிழிலும் நிரலாக்கம் செய்யப்படவேண்டும் என்னும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் "எழில்" என்னும் நிரலாக்க மொழி (http://ezhillang.org/) .

அண்ணா பல்கலைக்கழகம், "டகோலா" (தமிழ் கணிணி ஆய்வுக்கூடம்) என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி, தமிழ் மொழி வழி கணிணி பயன்பாட்டிற்கான பல உதவிகரமான மென்பொருள்களைத் தயாரித்து வருகிறது. கடந்த வருடம் (2014), செப்டம்பர் மாதம், தமிழக அரசினால், தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (Tamil Software Incubation Centre) ஒன்று தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஆக்கபூர்வ எண்ணங்களும், தமிழில் மென்பொருள் உருவாக்கும் ஆர்வமும், ஆற்றலும் கொண்டிருப்போர், அந்த எண்ணங்களைச் செயல்படுத்தத் தேவையான ஆய்வு மேற்கொள்ளவும், பரிசோதிக்கவும், மேம்படுத்தி உலகிற்கு வழங்கவும் இம்மையம் துணை புரியும்.

"தொல்காப்பியர் தமிழ் கணிணி இணைய ஆய்வகம்" (http://tholkappiar.org) என்னும் சிறப்புக் குழு தனியார் அமைப்பாக கடந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் உருவ ஒப்பு நிரல் (Pattern Recognition), பழங்கால தமிழ் எழுத்துக்களை கணணிமயமாக்கல் (Digitization of Ancient Tamil Texts)  என கணணி தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடும் கல்வியாளர்கள் மற்றும் மென்பொறியாளர்களின் கூட்டமைப்பாகும் இது.

"இரும்பிலே ஒரு இருதயம்" என்ற பிரபலமான பாடலுடன், தமிழ்த் திரையுலகில் அறிமுகமான திரு. மதன் கார்க்கி அவர்கள் தனது "ஆராய்ச்சி நிறுவனம்" மூலமாக, பல மென்பொருள் வடிவங்களை தமிழுக்கு வழங்கி வருகிறார்.
 

கணிணி சார்ந்த கருவிகளில் தமிழ்





இணையம், நுண்ணறிபேசி, கைக் கணிணி போன்ற கணிணி சார்ந்த மற்ற உபகரணங்கள், கருவிகளிலும் தமிழ் மொழியின் பதிப்பு இருந்தாலும், நிரல் முதல் அனைத்தும் தமிழில் கொண்டு வரவேண்டியதற்கான அவசியம் இருக்கிறது. இதற்கு தொடர்ந்து  ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு கூட, எளிதான் தமிழ் மொழி விசைப்பலகை தேவை. தற்போது, திரையில் தோன்றும் விசைப்பலகைகள், பலருக்கும் இன்னும் பிடிபடாத நிலையிலேயே உள்ளது.

இணைய உலாவிகளில், Firefox, முதன் முதலாகத் தமிழில் பேசத் துவங்கியது. தற்போது, பல உலாவிகள் தமிழ் பேசக் கற்றுக் கொண்டுள்ளன. பதிவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வந்த காலத்தில், திரட்டிகள் பல காட்சிக்கு வந்தன. இவைகள், ஒரே இடத்தில் பல பதிவர்களின் படைப்புகளைக் காண வழி வகுத்தன. தமிழ் மொழியினை இணையத்தில் பரவவிட்ட பெருமை தமிழ்மணம், வலைச்சரம் போன்ற வலைத்தளங்களுக்குச் சேரும்.

மிண்ணணு சாதனங்கள் பலவற்றிலும், அதனை தயார் படுத்தும் போது, இன்று தமிழ் ஒரு முக்கிய மொழியாக மொழியாக பட்டியலிடப்படுகிறது. தானியியங்கி பணம் தரும் சாதனங்களிலும், எளிய பரிவர்த்தனைகளுக்காகத் தமிழ் மொழி தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


நிறைநயில்

ஒருபுறம் தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து, தன் அயராத உழைப்பினால், கன்னித் தமிழை, கணிணியில் வளர்க்கப் போராடி வந்தாலும், பயன்படுத்துவோர்களின் ஊக்கம் சரியாகக் கிடைப்பதில்லை என்றே சொல்ல வேண்டும். "உடல் மண்ணுக்கு...உயிர் தமிழுக்கு.." என அரைகூவல் விடுப்பவர்கள் கூட, தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்காமல் பிற மொழியிலேயே பரிவர்த்தனைகள் செய்கின்றனர்.

இந்த நிலை மாற வேண்டும்...நம்மால் இயன்ற வரை தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்துவோம்.

கணிணியிலே தமிழாட்சி காண வேண்டும் ! வாழ்க தமிழ் ! வளர்க அதன் புகழ் !

நன்றி:
1. தி ஹிந்து செய்தித்தாள்
2. இணையம்

உறுதிமொழி:

1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 1 கணிணியில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைப் போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்

2.  இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்


மின் - தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காக, நான் பதிவு செய்த பிற படைப்புகள்:
1. துவளாதே ! துள்ளி எழு - மரபுக் கவிதை
2. தொடர்ந்து எழுது தோழா ! - மரபுக் கவிதை
3. ஏற்றம் வரும் எதிரிலே ! - மரபுக் கவிதை
4. திரும்பி வா பாதை மாறி ! - மரபுக் கவிதை
5. பண்பாடு வேறல்ல ஆணிவேர்! - புதுக் கவிதை

Thursday, September 24, 2015

லுங்கி !

"குலுங்கி அழுது கேட்கிறேன்-என்னை ஏன் கைவிட்டீர்?" என்ற தலைப்பில் சக பதிவர், திரு. டி.என்.முரளிதரன் அவர்கள், மங்கி வரும் லுங்கி அணியும் பழக்கத்தைப் பற்றி மிக விரிவாகவும், நகைச்சுவையுடனும் எழுதியிருந்தார்.

http://www.tnmurali.com/2015/06/voice-of-lungi-indian-dresses.html

லுங்கி தொடர்பான எந்தத் தகவலையும் விடாமல், அவர் பதிவு செய்திருந்தது என்னைக் கவர்ந்தது. அதையே ஒரு கவிதையாக்கும் முயற்சியில் இறங்கினேன். அதன் விளைவு இதோ:
 -----------------------------------------------------------------------------------------------------------





 "லுங்கி" என்றென்னை சட்டை செய்ய மறந்தாயா இளைஞனே ! - முட்டி வரை
தொங்கும் ட்ராயருக்கு மாறி எனை மறந்ததுஏன் நண்பனே !
இடையில் அணிந்திங்கு இடைப்பட்ட வயதுடையோர் மட்டுமே -  சற்றும்
தடைகள் அதுவன்றி நடந்திடுவார் அவருக்கென் நன்றியே!

திரையில் ரவுடிகளும் எனைஅணிந்த காலம் மாறிப் போனதே ! - இப்பொழுது
அரையில் பர்முடாசும் இடம்பிடிக்க என்நிலைமை பாவமே !
லுங்கி டான்ஸென்று ஆடினாரே பாலி வுட்டின் பாதுஷா ! - பல கோடி
பொங்கி பாட்டு ஹிட்டு, என்நிலைமை மாறவில்லை சோகமே !

போர்வை அதுவாக நான்மாறி உதவியதை மறந்ததேன்? - கிழிசல்களை
பார்வை படாவண்ணம் மறைத்திடுவேன் எனைத் தவிர்த்தல் நியாயமா?
வேட்டி அதுகூட அவிழ்ந்திங்கு சங்கடங்கள் சேர்க்குமே  - என்னுடனே
போட்டி அதுபோட வேட்டிக்கிலை சிறிதளவும் தகுதியே !

அன்னை சேலைபோல  மழலைதூங்கும் தூளியாக மாற்றியே ! - அந்தரத்தில்
என்னைத் தொங்கவிட்டு ஆட்டியதும் மறந்ததுஏன் நண்பனே !
அழுக்கைத் துடைத்தெடுக்க, கைப்பிடிக்கும் துணியெனவே மாறினேன் ! - காலில்
மிதிக்கும் மிதியடியாய் நசுங்கி யேநான் இறுதிநாளைப் போக்கினேன் !

தையல் செலவுஇல்லை தையல்கூட அணிந்து கொண்டு போகலாம் ! - நல்ல
வெயில், மழை யெனவே எப்பொழுதும் எனை அணிந்து கொள்ளலாம் !
பொங்கல் திருநாளில் இலவசமாய் வேட்டி தரு வோரெல்லாம் - லுங்கி
எங்களையும் இலவசமாய் தந்துபலர் வாழ்த்துக்களை வாங்கலாம் !

மதங்கள் எனக்கில்லை; கோயில் செல்ல தடைஎனக்கு உள்ளதே ! - என்றும்
பதமாய் இயற்கையதன் அழைப்பினுக்கு விலகிடுவேன் சீக்கிரம் !
வேட்டி விளம்பரத்தில் தோன்றுகின்ற பிரபலங்களில் ஒருவரும் - கொஞ்சம்
மாற்றி எங்கள்குலம் போற்றினாலும் அவருக்கென் நன்றியே!

வீதி ஓரத்தில் கூவிஎனை விற்றுவந்த ஆட்களும் - இன்று
ஜாதி மாற்றம்போல் பர்முடாசை ஆதரித்து வருவது ஏன்?
இணைய வலைத்தளத்தில் வேட்டிக்கென் குரல்கொடுத்த பேரெல்லாம் - இங்கு
இணைந்தே எங்களுக்கும் குரல்கொடுக்கும் நாளும்வந்து சேருமோ?!

அண்டை நாடெல்லாம் கொண்டாடி எனைஅணிவார் இன்றுமே ! - ஐயகோ 
தொண்டை அடைக்கிறது  என்நிலைமை சொல்லியது குமுறியே !
இறுக்கம் மிகுவான ஆடைகளை அணியும் அன்பு நண்பனே ! - எங்கள்
உருக்கம் தனையறிந்து இரக்கம்காட்டி ஆதரிக்க வேணுமே !

Wednesday, September 23, 2015

நம் பண்பாடு ! நம் அடையாளம் !



மேலைநாட்டு மேகம் கொஞ்சம்
நம்ம ஊரு பக்கம் வந்து
"மாரி" யாக மாறி இங்கேப்
பெய்ததினால...

அந்த ஊரில் மேகம் அது
முகர்ந்து வந்த மண்ணின் மணம்...
நம்ம ஊரு மண்ணுக்குள்ளும்
கலந்ததினால...

சுத்தமாக மறந்து போச்சு
சுத்தமான நம் பண்பாடு !
சத்தமாக உரக்கச் சொன்னா
சூழும் பெரும் பாடு !

வந்தவரை உபசரிச்சு
விருந்து படைப்பதும்...கடன்
தந்தவரை தெய்வமெனத்
தொழுது நிற்பதும்...

நம்ம ஊரு பழக்கமுங்க...
மறந்திடலாமா? இதுபோல்
நம்ம ஊரு அடை யாளமெல்லாம்
மறைந்திடலாமா?

அந்த ஊரு மேகம் அது
திரும்பிப் போகட்டும் !
நம்ம ஊரு பழக்கம்...பண்..பாடு எல்லாம்
நம்மோடே இருக்கட்டும்  !



உறுதிமொழி:

1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 4 புதுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்

2.  இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்

Monday, September 21, 2015

துவளாதே ! துள்ளி எழு !





​மாற்றம் வரவேண்டும் எனநினைக்கும் மனமிருக்கா தோழா? - நாட்டின்
   மாண்பை மேம்படுத்தும் கனவிருக்கா  கண்களிலே தோழா?
சீற்றம் கொண்டுபின் அடங்கியேநீ ஒதுங்குவதும் முறையா? - ஏதும்
   சீர்செய் முடியாது எனமுடித்து ஒடுங்குவதும் சரியா?

வலிமை சேர்உடலும் பணபலமும் படைத்ததொரு கூட்டம் ! -  கொடும்
   வன்மை முறைசென்று விதவிதமாய் ஆடுதிங்கே ஆட்டம் !
தனிமை தனில்புலம்பி துடிதுடிக்கும் தோழர்களின் நாட்டம்  - ஒன்றாய்
    திரண்டே தோள்கொடுத்தால் எதிரியெலாம் எடுத்திடுவார் ஓட்டம் !

கனிம வளம்தன்னை களவாடிக் காசாக்கும் கும்பல் ! - அதைக்
    கண்டே அஞ்சாமல் போராடும் சகாயம் அவர்கள் !
தனியாய் நம்முன்னே ஒளிர்கின்ற சுடரெனவேத் தெரிவார் ! - அவர்
   வழியில் தடைதாண்டி துவளாமல் நீச்சலிட நீவா !


பாயும் நதியெல்லாம் வளைந்தோட அஞ்சுவதும் இல்லை ! - கடை
   சேரும் கடல்தூரம் அறிந்ததவும் சோர்வதுவும் இல்லை !
ஓயும் இப்பொழுது என அலைகள் நினைப்பதுவும் இல்லை ! - தான்
    ஓங்கி வீழ்ந்தாலும் மீண்டுமெழ மறப்பதுவும் இல்லை !


"போகும் தூரமது வெகுதொலைவு" சிந்தையிலே வைத்து...-  அதற்குள்
   'போதும்' எனஎண்ணி நில்லாமல் இலக்கினையே நோக்கு!
'ஆகும் இதுநம்மால்' நம்பிக்கை ஒளிதன்னை ஏற்று ! - எதிர்
   காணும் தடைகளைநீ வெற்றியதன் படிகளென மாற்று !


வெற்றிக் கனியதுவும் கைசேரும் வரையிலும்நீ ஓடு ! - அந்த
   வானம் அதைத்தாண்டி  வரைந்திடுவாய் புதுஎல்லைக் கோடு !
சுற்றும் எதிர்மறையை நம்பிக்கை அதனாலே வீழ்த்து ! - இந்த
   உலகேப் பாடிடுமே உனைஏற்றி அருந்தமிழில் வாழ்த்து !


உறுதிமொழி:

1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 5 மரபுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்

2.  இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்

Thursday, September 17, 2015

கணபதி கும்மி !


"கணபதி என்றாலே கவலைகள் ஓடும் !
என் மனம் எப்போதும் அவன்பதம் நாடும் !"

கணபதி கும்மி

Sunday, September 6, 2015

கையொப்பம் !


 திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் பதிவிட்ட "கையெழுத்து" என்ற பதிவினை இன்று படித்தேன். எடுத்துக் கொண்ட தலைப்பும், பதிவெழுதிய அணுகுமுறையும் என்னைக் கவர்ந்தது. அது ஒரு கவிதையாகவே எனக்குப் பட்டது. உடனே, அந்த பதிவை அப்படியே பத்தி வாரியாகக் கலப்படம் செய்யாத கவிதையாய் மாற்றி கீழே பதிவு செய்துள்ளேன். ஐயாவின் கட்டுரை படிக்க..

இங்கே சொடுக்கவும்



என்றிட்டேன் முதன் முதலாய்
 எனும் நினைவு இன்றில்லை !
அன்று உயர் பள்ளியிலே
  பயின்ற போது தானிருக்கும் !

பணிசேரும் வரை யினிலும்
   பைந்தமிழில் தான் இட்டேன் !
பணிசேர்ந்த பின் தொடங்கி..
  பலவிதமாய் மாறி யதே !

வங்கியிலே கணக் கொன்றை
   தொடங்கிடும் அவ் வேளையிலே
அங்குள்ள படிவத்தில்
 பதிந்திடவே தான் வேண்டும்...!

ஆவணங்கள் காசோலை...
  அளிக்கின்ற போதெல்லாம்
சோதனை சரி பார்ப்பதற்கும்
  ஏதுவாக அமைந் திருக்கும்!

சாட்சி என மற்றவ்ர்க்கே
 கவனமுடன் இட வேண்டும் !
காட்சி மாறி நமக்கதுவே...
  கலக்கமதை சேர்த்திடலாம் !

பதவிக்கென பலபேர்கள்...
  பலவிதமாய் நடிப்பாரே !
உதவிஎனும் பெயரினிலே
  இயக்கமாக இடுவாரே !

முதலமைச்சர் ஆனவுடன்
  முதலாவ தாகத் தான்
எதில் இடுவோம் என்றிங்கே
  கனவெல்லாம் காண்பாரே !

Friday, September 4, 2015

பதிவர் திருவிழா - வாழ்த்துவோம் !



இணையத்தில் தனித் தனியாய் படைப்பு தரும்
  இனிய தமிழ் பதிவரெல்லாம்..
இணைந்திட்டால் ஓரிடத்தில் திருவிழாதான் !

யாரெனவும் அறிந்திடாதான் எங்கிருந்தோ
ஆக்கிடும் நல் பதிவுகளை...
சீருடனே படித்தகமும் மகிழ்வதுடன்....

பின்னூட்டம் எனும்பெயரில் ஊக்கத்தை
ஊற்றித் தரும் உள்ளமெலாம்
முன்னோட்டம் ஆகிடுமே வருவதற்கு...

உதயத்துக் கதிரவனாய் ஜொலி ஜொலிக்கும்
உலகத் தமிழ் பதிவர்களின்...
இதயத்தின் சங்கமத்தை வாழ்த்திடுவோம் !





Thursday, September 3, 2015

ஆர்மி அங்கிள் !

"மணி ! வாசல்ல யார் வந்திருக்காங்க பாரு !" - அம்மாவின் கூவல் கேட்டு, ஓடி வந்தான் மணி...

எதிரே வாய் நிறையும் புன்னகையுடன் வந்தவரைப் பார்த்து..."அங்கிள் ! வாங்க...!ஆன்ட்டி வரலியா?" என்று கேட்டான்.

"அங்கிள், எப்போதும் சிங்கிளாத்தான் வருவார்...ஹா..ஹா...நான் Anti- Aunty...ஹா..ஹா..." என்று சிறித்தவாரே உள்ளே வந்தவர் அமர்ந்து கொண்டார்.

"டேய் ! என்னடா நான் அங்கிள் வந்திருக்கேன் ! என்னை விட்டுட்டு...ஆன்ட்டியைக் கேட்குறே"

"ம்...அது வந்து...ஆன்ட்டி வந்தா எனக்கு பலகாரம் சுட்டுத் தருவாங்க !"

"ஓ ! அதுதான் சேதியா ! நான் பல காரமென்ன..பல அதி காரிகளையே சுட்டவன்..!"

"அப்படீன்னா?"

"நான் ஆர்மியில இருந்தப்போ, எதிரி கேம்ப்-ல பெரிய பெரிய அதிகாரியையெல்லாம் சுட்டிருக்கேன்..."

"நிஜமாவா அங்கிள்? உங்க கிட்ட "gun" இருக்கா?"

"ஹா...ஹா..என் பேரு என்ன? ஆர்மி முரு கன்...! புரியுதா? ஹா..ஹா.."

"அங்கிள் ! என் பெயர்ல கூட தான் கன் இருக்கு...மணி gun டன்...! ஆனா, என்கிட்ட gun இல்லையே !"

"ஹி...ஹி..." - என் பதில் சொல்லமுடியாமல் சமாளித்தபடி, மணியின் முதுகில் தட்டிக் கொடுத்தார் அங்கிள்...

"என்ன அண்ணே சாப்பிடற? டீ, காபி..." - உபசரித்தாள் மணியின் அம்மா..

"டீ..க்ரீன் டீ...உடம்புக்கு நல்லது..."

"என்ன டீ?" - முதல் முறையாய் "க்ரீன் டீ" என்பதைக் கேள்விப்படும் மணி வியப்பாய் வினவினான்.

"அம்மாவ போய் 'என்னடி'னு கேட்கலாமா?" - என்று சிரித்தபடியே ஜோக்கடித்தார் அங்கிள்..

வாசலில் யாரோ வரும் ஓசை கேட்டது...

"என்னங்க..நீங்க இங்க இருக்கீங்க...உங்களுக்குத் தெரிஞ்சவங்க வீடா?" - என்று அங்கிளைப் பார்த்து கேள்வி கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் ஒரு பெண்...

திரும்பிப் பார்த்த அங்கிளுக்கு "பகீர்" என்று இருந்தது..."இவ எங்கடா வந்தா? " - இது மைன்ட் வாய்ஸ்,,,

சற்றே சுதாரித்த படி..."தேவயானி..இங்க ஏன் வந்த...போன் பண்ணியிருக்கலாமே" என்றார் அங்கிள்.




"இந்த வழியாப் போய்கிட்டு இருந்தேன்..வாசல்ல உங்க காரை பார்த்தேன்..நீங்க இங்கதான் இருக்கீங்கன்னு நேரா வந்துட்டேன்..என்னங்க இது வந்தவள வான்னு கூப்பிடாம ஏன் வந்தன்னு கேட்கறீங்க?"

"யாருண்ணே இந்த பொண்ணு...உங்க கிட்ட அண்ணி மாதிரி உரிமையாப் பேசறா.."

"என்னது...அண்ணி மாதிரியா..நான் இவரோட பொண்டாட்டிதான்...யாருங்க இவங்க..."

"அது வந்து...வந்து.."

"ஷாக்" ஆன மணியின் அம்மா தொடர்ந்தாள்..."என்ன அண்ணே ! வீட்டுல கோமல வள்ளின்னு ஒரு சம்சாரம் இருக்கறப்போ இந்த சமாச்சாரம்  வேறயா!"

"அது யாருங்க கோமல வள்ளி?" - தேவயானியின் ஷாக்...

ஆர்மி அங்கிள் நல்ல FIRING-கில் மாட்டியதுபோல் தவித்தார்.

சற்று தூரத்தில் இருந்த மணி சொன்னான்..."Anti Aunty ன்னு சொன்னீங்களே...இதுதானா...அது...! இப்ப சொல்லுங்க...உங்க பேரு என்ன...?
- நிலைமை புரியாமல் சிரித்துக் கொண்டே மாடிக்கு ஓடினான்..

அசடு வழிந்த அங்கிளுக்கு மணி கேட்ட கேள்வியின் பதில் காதில் ஒலித்தது...பொருத்தமான பெயர்தான் !

------------------

இந்தப் பதிவை மேலும் நகைச்சுவையாகத் தொடர முடியுமா?...யாரவது முயன்றால் மகிழ்ச்சி...


Wednesday, September 2, 2015

இயற்கை அதிசயம் !

இயறகையின் அதிசயங்கள்தான் எத்தனை?.............




சுற்றிடும் பூமியில் வாழ்ந்தும் - நாமும்
சுற்றியே விழுவதுமில்லை !
வெற்றிடம் நிறந்த காற்றை - கண்ணால்
உற்றினும் காணுவதில்லை !

சூரியன் கதிரின் வெம்மை - வாங்கிடும்
வெண்ணிலா சுடுவதுமில்லை !
ஆழியின் கரையைத் தொட்டு - ஆடிடும்
அலைகளும் ஓயுவதில்லை !

மின்னலின் கீற்று பாய்ந்தும் - வானில்
விரிசல்கள் விழுவதுஇல்லை !
பின்னலாய் வருமழைத் துளிகள் - மண்ணை
ஒருசேர நனைப்பதுமில்லை !

மழையிலே நனைகிற போதும் -பூவின்
வண்ணமும் நீங்குவதில்லை !
இதையெலாம் செய்திடும் மாயன் - அந்த
இறைவனின் நிகரதுஇல்லை !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates