.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Showing posts with label கணிணியில் தமிழ் வளர்ச்சி. Show all posts
Showing posts with label கணிணியில் தமிழ் வளர்ச்சி. Show all posts

Saturday, September 26, 2015

கன்னித் தமிழ் வளர்ப்போம் கணிணியிலே !

 பதிவர் திருவிழா - 2015 தொடர்பாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள எனது கட்டுரை !



நுழைநயில்

எத்தனை மொழி தெரிந்திருந்தாலும், எவருக்கும், தனது தாய் மொழியில் பேசும்போதுதான் ஒரு தனி சுகம் இருக்கும். எழுதும்போதும் அப்படித்தான். இந்நிலையில் அந்தத் தாய்மொழியானது, செம்மொழியாம், தமிழ் மொழியாகவும் இருந்தால்? ஆகா...சுந்தரத் தமிழ் மொழியைப் பேசிக் கொண்டே / எழுதிக் கொண்டே இருக்கத் தோன்றாதா? இன்றைய காலகட்டத்தில், நமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகி விட்ட கணிணியில் கூட, அவரவர் தனது சொந்த மொழியில் எழுதவும் / படிக்கவும் ஆர்வம் கொள்வது இயற்கைதானே ! இந்த ஆர்வத்தின் விளைவில் தான், கணிணியில், தமிழ் பிறந்தது !

"கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்தக் குடியினர்"

என்றாலும், தமிழ் மொழி கருத்து பறிமாற்றங்களுடன், கணிணியில் தமிழின் தோற்றம், மிகவும் தாமதமானதுதான். இருப்பினும், இன்றைய நிலையில், தமிழில் வரும் தளங்கள், பதிவுகளைப் பார்க்கும் போது, நல்லதொரு வளர்ச்சியினைக் காணமுடிகிறது.

கணிணியில் தமிழ் -  ஆரம்ப கால சவால்கள்

ஆங்கில கட்டளைகளை உள்ளேற்று, உடனே புரிந்து கொண்டு, செயாலாக்கும் திறனுடன், கணிணி உருவானாலும், அதனை சாதாரண மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டுமெனில், "அவரவர் மொழியில் பறிமாற்றங்களை செய்யவேண்டியது அவசியம்" என்பதை உணர்ந்த வல்லுநர்கள், அதற்கான் முயற்சியில் இறங்கினர். தமிழ் மொழியைப் பொறுத்த வரை, தமிழில் துவக்கப்பட்ட பல்வேறு "மின்னிதழ்கள்", கணிணியில் தமிழுக்கான துவக்கத்தைத் தந்தன. ஒவ்வொரு நிறுவனமும், தனக்கென்று ஒரு "எழுத்துரு" வைத்துக் கொண்டு, அதனை தரவிறக்கம் செய்து, வாசகர்கள் தமிழில் படிக்கலாம் எனும் வசதியில் செயல்பட்டனர். தகுந்த "எழுத்துரு" கணிணியில் இல்லாத நேரத்தில், எழுத்துக்கள் சிதற விட்ட பூச்சிகள் போல தோன்றும். இந்த அணுகுமுறையில் முக்கிய பிரச்சனையாக இருந்தது "தரப்படுத்துதல்" இல்லாதது தான் !

தமிழ் மொழியைக் கணிணியில் கொண்டு வர, பல தமிழ் மற்றும் கணிணியியல் வல்லுநர்கள் முயற்சியினால், வெவ்வேறு விதமான தீர்வுகள் தரப்பட்டாலும், அம்முயற்சிகள் சமூகத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எண்பதுகளின் முடிவிலும், தொண்ணூறுகளின் முதல் பாதி வரையிலும் இந்த நிலை நீடித்தது.


சவாலுக்கான தீர்வு

கணிணியில் தமிழ் பயன்பாட்டில் இருந்த சிக்கல்களைத் தீர்க்கும் முதல் முயற்சியாக, "முதல் தமிழ் இணைய மாநாடு" என்னும் நிகழ்ச்சி, 1997-ல் சிங்கப்பூரில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளை கையெடுத்து 1999-ல் சென்னையில் நடந்த "இரண்டாவது தமிழ் இணைய மாநாட்டில்", சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கத்தில் ஒரே மாதிரியான முறைப்பாடு இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. "தமிழ்நெட்-99" விசைப்பலைகையும், தமிழ் சொற்களுக்கான பொதுக் குறியீடுகளைப் (TAB, TAM) பயன்படுத்துவதிலும் ஒருமித்தக் கருத்து ஏற்பட்டது. இத்தகைய முடிவுகள் மற்றும் முன்னேற்றங்களுக்குப் பிறகும், இதன் செயலாக்கத்தில் சில சிக்கல்கள் இருந்தது என்றாலும், கன்னித் தமிழை, கணிணியில் ஏற்றும் முயற்சியில், இந்நிகழ்வுகளை ஒரு மைல்கல்லாகச் சொல்லலாம்.

சென்னையில் நடந்த இந்த மாநாட்டின் பயனாக,  தமிழகத்திற்கு, "தமிழ் இணையக் பல்கலைக்கழகம்"  கிடைத்தது. பின்னர் இது "தமிழ் இணையக் கல்விக்கழகம்" என்ற பெயர் பெற்றது.  மேலும்,  "தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி" என்ற ஒன்றும் நிறுவப்பட்டு, தமிழில் மென்பொருள் தயாரிப்போருக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இதற்கும் மேலாக, கணிணியில் தமிழ் மொழியை வளர்க்க வேண்டியதன் அவசியம் பரவலாக்கப்ப்ட்டது.

கணிணியில் தமிழ் வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான தொடர்ந்த ஆதரவு பெற வேண்டி, சிங்கப்பூர் அரசாங்கத்தின் தாராள நிதியுதவியுடன் "உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் " (உத்தமம்)  நிறுவப்பட்டது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடனும், இணையத்தின் அசுர வளர்ச்சியினாலும், கணிணியில் தமிழின் பயன்பாடு அதிகமானது.

வளர்ச்சிப் படிகள்

தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது/பெறுவது, அரட்டை அடிப்பது மிகவும் எளிதானது. கண் பார்வையில்லாதவர்களுக்கு உதவும் வகையில் தமிழில் பேசுவதை எழுத்தாக்கி, கட்டளையாக்கி கணிணிக்கு உள்ளீடு செய்யும் மென்பொருள் வெளிவந்தது. தமிழ் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் முதலியன மின் வடிவம் கொள்ளத் தொடங்கின. "உத்தமம்"  மூலமாக தமிழுக்கு "யூனிகோட்" கூட்டமைப்பு இடம் ஒதுக்கியது. கணிணியில் தமிழ் வளர்ச்சியின் வரலாற்றில், இது மற்றுமொரு மைல்கல்லாகவும், திருப்பு முனையாகவும் அமைந்தது என்பது மறுக்க முடியாது. குறிப்பாக, கணினியின் மூலம், இணையத்தில் பறிமாற்றம் செய்யப்படும் தமிழ் தகவல்கள், இந்த "யூனிகோட்" குறியீடு தரும் வசதியினால்தான் சாத்தியமாகிறது. இந்த கட்டுரை கூட 'யூனிகோட்' மாற்றியின் மூலமாக பதிவு செய்யப்பட்டது தான் !

தொடர்ந்த / தொடரும் முயற்சிகள்

சீனா, ஜப்பான் போன்ற நாடுகள், தங்கள் மொழியிலேயே கணிணிக்கான நிரலாக்கம் செய்கின்றன. இது போலவே தமிழிலும் நிரலாக்கம் செய்யப்படவேண்டும் என்னும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் "எழில்" என்னும் நிரலாக்க மொழி (http://ezhillang.org/) .

அண்ணா பல்கலைக்கழகம், "டகோலா" (தமிழ் கணிணி ஆய்வுக்கூடம்) என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி, தமிழ் மொழி வழி கணிணி பயன்பாட்டிற்கான பல உதவிகரமான மென்பொருள்களைத் தயாரித்து வருகிறது. கடந்த வருடம் (2014), செப்டம்பர் மாதம், தமிழக அரசினால், தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (Tamil Software Incubation Centre) ஒன்று தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஆக்கபூர்வ எண்ணங்களும், தமிழில் மென்பொருள் உருவாக்கும் ஆர்வமும், ஆற்றலும் கொண்டிருப்போர், அந்த எண்ணங்களைச் செயல்படுத்தத் தேவையான ஆய்வு மேற்கொள்ளவும், பரிசோதிக்கவும், மேம்படுத்தி உலகிற்கு வழங்கவும் இம்மையம் துணை புரியும்.

"தொல்காப்பியர் தமிழ் கணிணி இணைய ஆய்வகம்" (http://tholkappiar.org) என்னும் சிறப்புக் குழு தனியார் அமைப்பாக கடந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் உருவ ஒப்பு நிரல் (Pattern Recognition), பழங்கால தமிழ் எழுத்துக்களை கணணிமயமாக்கல் (Digitization of Ancient Tamil Texts)  என கணணி தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடும் கல்வியாளர்கள் மற்றும் மென்பொறியாளர்களின் கூட்டமைப்பாகும் இது.

"இரும்பிலே ஒரு இருதயம்" என்ற பிரபலமான பாடலுடன், தமிழ்த் திரையுலகில் அறிமுகமான திரு. மதன் கார்க்கி அவர்கள் தனது "ஆராய்ச்சி நிறுவனம்" மூலமாக, பல மென்பொருள் வடிவங்களை தமிழுக்கு வழங்கி வருகிறார்.
 

கணிணி சார்ந்த கருவிகளில் தமிழ்





இணையம், நுண்ணறிபேசி, கைக் கணிணி போன்ற கணிணி சார்ந்த மற்ற உபகரணங்கள், கருவிகளிலும் தமிழ் மொழியின் பதிப்பு இருந்தாலும், நிரல் முதல் அனைத்தும் தமிழில் கொண்டு வரவேண்டியதற்கான அவசியம் இருக்கிறது. இதற்கு தொடர்ந்து  ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு கூட, எளிதான் தமிழ் மொழி விசைப்பலகை தேவை. தற்போது, திரையில் தோன்றும் விசைப்பலகைகள், பலருக்கும் இன்னும் பிடிபடாத நிலையிலேயே உள்ளது.

இணைய உலாவிகளில், Firefox, முதன் முதலாகத் தமிழில் பேசத் துவங்கியது. தற்போது, பல உலாவிகள் தமிழ் பேசக் கற்றுக் கொண்டுள்ளன. பதிவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வந்த காலத்தில், திரட்டிகள் பல காட்சிக்கு வந்தன. இவைகள், ஒரே இடத்தில் பல பதிவர்களின் படைப்புகளைக் காண வழி வகுத்தன. தமிழ் மொழியினை இணையத்தில் பரவவிட்ட பெருமை தமிழ்மணம், வலைச்சரம் போன்ற வலைத்தளங்களுக்குச் சேரும்.

மிண்ணணு சாதனங்கள் பலவற்றிலும், அதனை தயார் படுத்தும் போது, இன்று தமிழ் ஒரு முக்கிய மொழியாக மொழியாக பட்டியலிடப்படுகிறது. தானியியங்கி பணம் தரும் சாதனங்களிலும், எளிய பரிவர்த்தனைகளுக்காகத் தமிழ் மொழி தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


நிறைநயில்

ஒருபுறம் தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து, தன் அயராத உழைப்பினால், கன்னித் தமிழை, கணிணியில் வளர்க்கப் போராடி வந்தாலும், பயன்படுத்துவோர்களின் ஊக்கம் சரியாகக் கிடைப்பதில்லை என்றே சொல்ல வேண்டும். "உடல் மண்ணுக்கு...உயிர் தமிழுக்கு.." என அரைகூவல் விடுப்பவர்கள் கூட, தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்காமல் பிற மொழியிலேயே பரிவர்த்தனைகள் செய்கின்றனர்.

இந்த நிலை மாற வேண்டும்...நம்மால் இயன்ற வரை தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்துவோம்.

கணிணியிலே தமிழாட்சி காண வேண்டும் ! வாழ்க தமிழ் ! வளர்க அதன் புகழ் !

நன்றி:
1. தி ஹிந்து செய்தித்தாள்
2. இணையம்

உறுதிமொழி:

1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 1 கணிணியில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைப் போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்

2.  இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்


மின் - தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காக, நான் பதிவு செய்த பிற படைப்புகள்:
1. துவளாதே ! துள்ளி எழு - மரபுக் கவிதை
2. தொடர்ந்து எழுது தோழா ! - மரபுக் கவிதை
3. ஏற்றம் வரும் எதிரிலே ! - மரபுக் கவிதை
4. திரும்பி வா பாதை மாறி ! - மரபுக் கவிதை
5. பண்பாடு வேறல்ல ஆணிவேர்! - புதுக் கவிதை

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates